அதிமுக-காங்கிரஸ் மோதல்: போலீசார் வழக்கு பதிவு

அதிமுக-காங்கிரஸ் மோதல்: போலீசார் வழக்கு பதிவு
திருவான்மியூரில் அதிமுக-காங்கிரஸ் மோதல் வேட்பாளர்கள் மீது போலீசார் பதிவு

சென்னை திருவான்மியூரில் அதிமுக-காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடியாக மோதலில் ஈடுபட்டதால் வேளச்சேரி அதிமுக வேட்பாளர், மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா கடந்த 21ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் கார்களில் வாக்கு சேகரிப்பதற்காக திருவான்மியூர் எல்பி சாலை அருகே சென்று கொண்டிருந்தார். திருவான்மியூர் சிக்னல் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற பைக் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. உடனே ஹசன் மவுலானாவும், காங்கிரஸ் கட்சியினரும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, பைக்கில் இருந்து கீழே விழுந்தவர்களுக்கு உதவி செய்தனர். இந்த விபத்தை பார்த்த அதிமுக வழக்கறிஞர் வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது ஹசன் மவுலானா தரப்புக்கும், அசோக் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து திருவான்மியூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த தகராறு தொடர்பாக இரு தரப்பினரும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் அதிமுக வேட்பாளர் அசோக் உட்பட அவரது ஆதரவாளர்கள் மீதும், ஹசன் மவுலானா உட்பட ஆதரவாளர்கள் மீதும் 3 பிரிவுகளின் தலா ஒரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Tags

Next Story