என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் நீதிபதி தீபா நேரில் ஆய்வு

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் நீதிபதி தீபா நேரில் ஆய்வு

புழல் அருகே என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் நேரில் ஆய்வு செய்த நீதிபதி தீபா. 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை முக்கிய குற்றவாளி திருவேங்கடம் புழல் அருகே என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் நீதிபதி தீபா நேரில் ஆய்வு செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் (33) என்ற முக்கிய குற்றவாளியை இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை மணலியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

ரெட்டேரி ஆட்டுச்சந்தை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற திருவேங்கடம் போலீசிடம் இருந்து தப்பி சென்று புழல் வெஜிடேரியன் விலேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்தார். அப்போது காவல்துறையினர் அங்கு சென்று பிடிக்க முற்பட்ட போது காவல்துறையினரை நோக்கி கள்ளத்துப்பாக்கியால் சுட்டதால் பதிலுக்கு காவல்துறையினர் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்து சுட்டு கொன்றனர்.

தொடர்ந்து திருவேங்கடத்தின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு புழல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் மாதவரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தீபா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்த காவல் ஆய்வாளர் முகமது புகாரியிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி வந்து கொட்டகையில் பதுங்கி இருந்தது, காவல்துறையினரை நோக்கி எவ்வாறு சுட முயன்றார், காவல்துறையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல், குற்றவாளிக்கு எங்கெங்கு குண்டு பாய்ந்தது, சம்பவம் நடைபெற்ற நேரம் என்ன, மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தது எப்போது குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்பாக காவல் ஆய்வாளர் முகமது புகாரி மற்றும் அப்போது உடனிருந்த காவல்துறையினரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

நீதிபதியின் ஆய்வு, விசாரணை ஆகியவை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் நீதிபதி தீபா முன்னிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடற்கூறு ஆய்வும் வீடியோ பதிவுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story