புழலில் நீர் பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புழலில் நீர் பிடிப்பு பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புழல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது 

புழல் அருகே நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70-க்கும் மேற்பட்ட வீடுகளை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு.

புழல் அருகே உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் அடுத்த இரட்டை ஏரிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்த மீட்டெடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் ஆக்கிரமிப்பில் உள்ள 70.க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றிட ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உதவியுடன் சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலர் தங்களது உடலில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முற்பட்டனர்.


அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவர்களிடம் இருந்த டீசல் கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பெண் ஒருவரும் தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் அவரையும் மீட்ட காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தில் இருந்து திடீரென வெளியேற வேண்டும் என்றால் எங்கு செல்வது என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், போதிய அவகாசம் அளித்திட வேண்டும் எனவும், மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்காக சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story