சிபிஎஸ்இ தேர்வு முடிவுக்குபின் கல்லூரி மாணவர் சேர்க்கை- அமைச்சர் பொன்முடி

சிபிஎஸ்இ தேர்வு முடிவுக்குபின்  கல்லூரி மாணவர் சேர்க்கை- அமைச்சர் பொன்முடி

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற  நிறுவனர் நாள் விழா.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கல்லூரியின் ஆண்டு மலரை அமைச்சர் பொன்முடி வெளியிட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார். விழாவின் முடிவில் கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் க.பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

விழாவில் உரையாற்றிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெண்கள் முன்னேற்றத்திற்காக தான் எத்திராஜ் கல்லூரி தொடங்கப்பட்டது. பெண்களின் உரிமைக்காக முதன் முதலில் குரல் கொடுத்தது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போது அவர்கள் வழியில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலில் கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். திமுக இல்லையென்றால் பெண்களுக்கான பல உரிமைகள் கிடைத்திருக்காது என்றார்.

அவரைத்தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 33% இடஒதுக்கீடு, அரசு பணிகளில் இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். பெண்கள் நலனுக்காக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண திட்டத்தை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் பெண்களுக்காக 2 மகளிர் கலை கல்லூரி தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என பேசினார்.

உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியபோது, பெண்கள் கோயில்களுக்கி செல்ல முடியாத நிலை இருந்தது. ஆண் பெண் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. நீதி கட்சியை துவக்குவதற்கான கூட்டம் எத்திராஜ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. பெண்கள் கல்வி வளர்ச்சிக்காக திருமண உதவி திட்டத்தை அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தற்போது கலைஞரின் வழியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பேருந்துகளில் இலவச பயணம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர், அவரின் வழியில் தற்பொது முதலமைச்சர் பெண்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறார். தியாராஜபாகவதரின் குடும்பத்திற்கு உதவி செய்து வருபவர் முதலமைச்சர். கல்லூரிகளில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும் போது புத்தகத்தில் உள்ள பாடங்களோடு சேர்ந்து சமூகநீதி, பெண்களின் உரிமை போன்றவைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Tags

Next Story