ஆதரவற்றோர் வயிற்று பசியை போக்கி வரும் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி!

ஆதரவற்றோர் வயிற்று பசியை போக்கி வரும் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி!

ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வாங்கிவரும் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி.

சென்னை பகுதியில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கி வயிற்று பசியை ஆற்றி வருகிறார் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி.

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோயின் யுத்த தாண்டவ காலக்கட்டம் இது. இந்த கோர தாண்டவத்தில் சிக்கிய மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து போர்க்களத்தில் சிக்கி தவிப்பதுபோல் கஷ்டங்களை சுமந்து கொண்டிருக்கின்றனர்.

இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் செய்வது எதிர்பாராத உதவி. இந்த கருணை மனப்பான்மையை நாம் இந்த கொரோனா காலக்கட்டத்தில் காண நேரிடுகிறது. சாலை ஒரங்களில் பசியால் முடங்கிக்கிடக்கும் மக்களை பார்க்கும் கருணை மனிதர்கள் பலர் தாமாக முன்வந்து உணவு வழங்கி வருகின்றனர். இதில் முக்கியமாக சில மனிதாபிதமான போலீசார், தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் அடங்குவர்.

இதேபோல், சென்னை மதுரவாயல் மின்வாரிய உதவி செயற்பொறியார் ஏழைகளுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். நடைபாதைகளையே தங்கள் வீடாக மாற்றிய ஆதரவற்றோர்களின் பசியினை அவர்களின் முகத்தில் கண்ட அவர், நோய் தாக்கத்தைவிட பசியின் தாக்கம் மிக கொடியது என முடிவு செய்தார். ஊரடங்கு பிறப்பித்த நாள் தொடங்கி இன்று வரை அவர்களுக்கு உணவளித்து வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோலிவாக்கம் என்னும் கிராமத்தில் பிறந்த வெங்கடேசன்,1998 ஆண்டில் தமிழ்நாடு மின்வாரிய துறையில் தனது முதல் பணியை தொடங்கினார். தன்னுடைய சிறந்த பணி நேர்மையாலும் நிர்வாகத் திறனாலும் தற்போது மதுரவாயல் மின்வாரிய உதவி செயற் பொறியாளராக பணி புரிந்து வருகிறார்.

சென்னை சூளைமேட்டில் உதவி பொறியாளராக இருந்தபோது மின் வாரியத்தில் பழைய இரும்பு மீட்டருக்கு பதில் டிஜிட்டல் மீட்டர் கொண்டு வந்த காலக்கட்டம் அது. அச்சமயத்தில் அப்பகுதியில் 15000 மீட்டர் தொலைவு வரை குறுகிய காலத்தில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி மின் வாரியத்திற்கு அதிக வருமானம் ஈட்டி தந்து மாநில அளவில் பாராட்டு பெற்றவர். வர்தா, கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மின் கம்பங்களை சரி செய்து மக்களின் வாழ்வை வெளிச்சத்தில் கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவர்.

கடந்த ஆண்டு 2020 கொரோனா ஆரம்ப காலகட்டத்தில் தனது மகத்தான சேவையை தொடங்கிய இவர் இன்று வரை பலருக்கும் உணவினை வழங்கி வருகிறார். கொரோனாவால் தங்க இடமின்றி ஆதரவற்ற மக்கள் பலர் சாலையோரங்களில் பசியும் கண்ணீரோடு இருப்பதை அறிந்து வேதனை அடைந்தார்.

இத்துயரத்தை மனதில் கொண்ட அவர், சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் தொடங்கி சென்னையில் பல இடங்களில் ஒரு வேளை உணவினை வழங்கி வருகிறார். தன்னுடைய சொந்த ஊதிய பணத்தினை வைத்து மக்கள் பசியை போக்கி வரும் அரசு அதிகாரியான இவரது செயல் காண்போர் மத்தியில் உள்ளம் நெகிழ வைத்துள்ளது.

Tags

Next Story