கொரோனா மையங்களை கண்காணிக்க சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

கொரோனா மையங்களை கண்காணிக்க சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்
- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த போதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை 13,728 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்து செல்கிறது. தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு, ராயபுரம் ஆகிய ஐந்து மண்டலங்களில் அதிக அளவில் தொற்று ஏற்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனால்சென்னையில் கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழிகின்றன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பெரிய மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. தவிர கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகம், அம்பத்தூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவையும் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையங்களாக இயங்கி வருகின்றன. இந்த கொரோனா மையங்களைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமனம் செய்து உள்ளது.

அதன்படி சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது என்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கொரோனா சிகிச்சை மையங்களை தினமும் கண்காணித்து நோயாளிகளின் விவரங்கள், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்றவற்றை தமிழக அரசுக்குத் தெரிவிப்பார் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story