ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பரிசலில் சென்று உற்சாகம்

ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

Update: 2022-01-01 11:00 GMT

ஒகேனக்கல்லில் பரிசலில் உற்சாகமாக சென்ற பயணிகள். 

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால்,  ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில்,  மழை பொழிவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வினாடிக்கு 6,000 கனஅடியாக நீர்வரத்து இருந்து வருகிறது. இதனிடையே, இன்று ஆங்கில புத்தாண்டு விடுமுறையை கொண்டாட, ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள், பரிசலில் சென்று ஐந்தருவி பகுதிக்கு சென்று செல்பி எடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர்.

மேலும் விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால், சுற்றுலா தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரம், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில்,  காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News