ஐப்பசி விசு திருவிழா; சித்திர சபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு சித்திர சபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

Update: 2024-10-16 06:28 GMT

சித்திர சபையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம்

ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் சித்திரை சபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆலயமான திருக்குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மன் திருக்கோவில். பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையும் இங்கு அமைந்துள்ளது. வைணவ கோயிலாக இருந்த இந்த திருத்தலத்தில் அகஸ்தியர் வழிபட சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாறுவேடத்தில் சென்று பெருமாள் சிலையை லிங்கமாக மாற்றியதாக கோயில் வரலாறு கூறுகிறது. அருவிகரையில் கோவில் அமைந்திருப்பதால் சாமிக்கு ஜலதோஷம் ஏற்படாமல் இருக்க தைலம் காய்ச்சி சிவனுக்கு தேய்ப்பது வழக்கமாக உள்ளது.இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோயிலில்  ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது பழக்கம்.

இந்த ஆண்டிற்கான ஐப்பசி விசு திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது

திருவிழாவை முன்னிட்டு  குற்றாலம் சித்திர சபையில் உள்ள நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது . இதனை முன்னிட்டு நடராஜருக்கு பால்,திரவியம்,சந்தனம், தயிர்,  பன்னீர் என பல்வேறு வாசனை திரவியங்கள் மூலமாக அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News