குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு, இன்று முதல் அனுமதி தரப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-01-03 04:45 GMT

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது,  குற்றாலம் அருவி. இங்கு,  பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் கொரோனா விதிமுறை காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு அண்மையில்,  சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

அதனை தொடர்ந்து,  தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து சென்றனர். ஆங்கில புத்தாண்டு தினத்தில் அருவிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதாலும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் அச்சம் காரணமாகவும்,    கடந்த 31.12.2021முதல்,  நேற்று வரை,  மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில்,  இன்று முதல் அந்த தடை நீங்கி உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குற்றால அருவிகளில் காலை 6 மணி முதல்,  மாலை 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் காலை முதலே,  சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் நீராடினர். நேற்றும் நேற்று முன்தினமும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மிதமான மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.

Tags:    

Similar News