Kodaikanal-Palani Rope Car project survey started-கொடைக்கானல் - பழனி ரோப் கார் திட்ட ஆய்வு தொடங்கியது

கொடைக்கானல் - பழனி இடையே ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு தொடங்கி உள்ளது.

Update: 2022-10-16 10:38 GMT

ரோப் கார். கோப்பு படம். 

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுவது கொடைக்கானல். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த குளுகுளு நகரம் அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களில் மிகவும் முந்தைய காலத்தில் கொடைக்கானல் மற்றும் பழனி மலைகள் தொடர்பான குறிப்புகள் உள்ளன. இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் கோடைகாலத்தில் அவர்கள் தங்குவதற்காக 1845 ஆம்ஆண்டு  கண்டுபிடித்தது தான் கோடைவாசஸ்தலமான கொடைக்கானல். அப்போது அங்கு பழங்குடி இன மக்கள் வசித்து வந்தனர். வாகனங்கள் செல்ல எந்த சாலை வசதியும் இல்லாததால் ஆங்கிலேயர்கள் குதிரையில்தான் கொடைக்கானல் வந்தனர். பின்னர் சாலை அமைக்கப்பட்டது. ரெயில் பாதை கிடையாது. அதனால்  வாகனங்களில் சாலை வழியாகத்தான் கொடைக்கானலுக்கு வர முடியும். 

20 ஆம் நூற்றாண்டில் தமிழகம் மற்றும்  இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் கொடைக்கானலின் அழகான இயற்கையை ரசிக்க வந்தனர். பலர் அங்கு தங்கிவிட்டனர். அவர்கள் கொடைக்கானலை  மறுசீரமைப்பு செய்து  நவீன நகரகமாக மாற்றினார்கள்.கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மீது அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது.பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். 22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட கொடைக்கானல்  கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி)உயரத்தில் உள்ளது.  1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டன. வருடந்தோறும் மே மாதம் இங்கு கோடை விழா அரசு சார்பில் சிறப்பாக  நடத்தப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சீசன் அருமையாக இருக்கும்.

ரோப்கார் திட்டம்

திண்டுக்கல்,மதுரை,தேனி,ஒட்டன்சத்திரம் பழனிஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பஸ்கள்  இயக்கப்படுகின்றன. கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும், பழனி மலை வழியாகவும், பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் உள்ளன. இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது. 

இந்த நிலையில் கொடைக்கானலுக்கு ரோப்கார் வசதி செய்யப்பட உள்ளது என்ற மத்திய அரசின் அறிவிப்பு சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 18 இடங்களில் ரோப் கார் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பழனி-கொடைக்கானல் இடையே மொத்தம் 12 கிலோமீட்டர் வானியல் தூரத்துக்கு  இந்த ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இது தொடர்பாக வெளிநாட்டு என்ஜினீயர்கள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர்.  பழனியும் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான பழனி முருகன் கோவில் அங்கு உள்ளது. திருவிழா காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதேபோல் சீசன் காலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும்  சுற்றுலா பயணிகள், பழனி சென்று முருகன் கோவிலில்  சாமி தரிசனம் செய்வார்கள். பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் சுமார் 60கிலோ மீட்டர் தூரத்தை  3 மணிநேரம் பஸ்,கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரோப்கார் மூலம் பழனி-கொடைக்கானல் தூரத்தை மிக விரைவில் சென்றடைய முடியும்.

ஆஸ்திரிய நாட்டு என்ஜினீயர்கள்

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த  ஆஸ்திரிய நாட்டில் இருந்து தனியார் ரோப் கார் சேவை நிறுவன என்ஜினீயர்கள் மார்க்ஸ் டிருஷ்டர், யார்க் ஆகியோர் கடந்தவாரம்  பழனி முருகன் கோவிலுக்கு வந்து  பழனி ரோப்கார் நிலையத்தை பார்வையிட்டு அது செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அந்த குழுவினர்  கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட‌ கோவில்பட்டி, நகரில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளிட்ட ப‌ல்வேறு இடங்க‌ளிலும், ம‌லைப்ப‌குதிகளிலும் ஆய்வு செய்தனர். 

ஆய்வுக்கு பிறகு வெளிநாட்டு என்ஜினீயர்கள் குழுவின‌ர் கூறுகையில், கொடைக்கானல்-பழனி இடையே ரோப் கார் சேவை திட்டம் ரூ.450 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.  கொடைக்கானலில் இருந்து பழனிக்கு இடையே 12 கிலோ மீட்டர் வானியல் தூரம் இந்த ரோப் கார் இயங்கும்.  இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனர். ரோப் கார் திட்ட  முத‌ல்க‌ட்ட‌ ஆய்வுப்ப‌ணிக‌ள் தொடங்கி இருப்பது  சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.  இதன்மூலம் சுற்றுலா, ஆன்மிகம் சார்ந்த இடங்கள் மேம்பாடு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News