ரூ.750 செலுத்தினால் நாடு முழுவதும் ஒரு மாதம் பஸ், ரயிலில் இலவச பயணம்!

Update: 2022-05-24 17:00 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், ரூ. 750 பணம் செலுத்தினால், நாடு முழுவதும் ரயில், பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டம் அறிமுகமாகி இருக்கிறது; இது இங்கல்ல, ஜெர்மனியில்!

உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளும் திணறி வருகின்றன. இச்சூழலில், இதன் பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க, ஜெர்மனி அரசு நூதனமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்கு கட்டணமாக ரூ.750 செலுத்தினால், நாடெங்கும் பேருந்து மற்றும் ரயில்களில் இலவசமாக, ஒருவர் பயணம் செய்து கொள்ளலாம். இந்த திட்டம், வரும் ஆகஸ்ட் வரை அமலில் இருக்கும் என ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கு 2.5 பில்லியன் யூரோ செலவு ஏற்படும் என்று, ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். பொது போக்குவரத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News