குற்றாலத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு குளிக்க தடை: ஆட்சியர் உத்தரவு

இன்று முதல் 3 நாட்கள் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-31 13:20 GMT

குற்றாலம் மெயின் அருவி.

தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இன்று முதல் மூன்று நாட்கள் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதனால் குற்றால அருவி கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

பல மாதங்களுக்கு பிறகு கடந்த 20ஆம் தேதியன்று குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சமூக இடைவெளியை கடைபிடித்து சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி நாள்தோறும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளித்து சென்றனர்.

இந்த நிலையில் ஓமிக்ரான் அச்சம் காரணமாகவும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க தடை விதிப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் இந்த தடை மூன்று நாட்கள் தொடரும். இதனை அடுத்து அருவிக்கரையில் பதாகைகள் வைத்து வழி மூடப்பட்டுள்ளது மே.லும் அருவிகளில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்

Tags:    

Similar News