ஆன்லைன் மூலம் பண மோசடி - வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

Update: 2021-06-13 11:11 GMT

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் பண மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை அடுத்து ஸ்டேட் பேங்க் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த சில வருடங்களாக ஆன்லைன் பணமோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு வங்கி வாடிக்கையாளர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருந்தும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இதனை தடுக்கும் பொருட்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தற்போது இது குறித்து எஸ்.பி.ஐ., வங்கி பயனர்கள் வங்கி தொடர்பாக பதிவிறக்கம் செய்யும் செயலிகளில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தது. வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ செயலியை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தற்போதைய கொரோனா காலத்தில் பயனர்கள் அனைவரும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் தங்களது பணபரிவர்தனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.

இது குறித்து பஞ்சாப் நேஷனல் பேங்க் தெரிவித்ததாவது, வங்கிகள் பெயரில் வரும் எந்த ஒரு லிங்க் அல்லது நம்பர்களை க்ளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் பயனர்கள் தங்களது வங்கி குறித்த முக்கிய தகவல் ஏதேனும் தெரிய வேண்டும் என்றால் அதற்கு அதிகாரபூர்வ வலைத்தளமான https:/www.pnbindia.in என்ற தளம் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

Similar News