பிரபாகரன் இறப்பு சான்றிதழ் எங்கே? : பழ.நெடுமாறன் கேள்வி

ராஜீவ் கொலையில் இருந்து பிரபாகரனை விடுவிக்க இந்தியா பலமுறை கேட்டும், அவரது இறப்பு சான்றிதழை இலங்கை ஏன் வழங்கவில்லை என்று பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்;

Update: 2023-02-19 03:56 GMT

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்

2009-ல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. 1984ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தடவை சிங்கள அரசும், சிங்கள இராணுவமும் அறிவித்திருக்கின்றார்கள். எதற்காக இதனை செய்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியமானது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், உலகம் முழுவதும் இருக்கின்ற ஈழத்தமிழர்கள், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் மன உறுதியை தகர்க்க வேண்டும். அவர்களை அச்சமடையச் செய்ய வேண்டும், தங்களுக்கு அவர்களின் எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பொய்ச் செய்தியை தொடர்ந்து பரப்பிவருகின்றனர் எனவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் உள்ள தடயவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் மருத்துவர் சந்திரசேகரன், சென்னை தடயவியல் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை நாங்கள் கண்டெடுத்தோம் என்று 11 மணிக்கு அறிவிக்கின்றார்கள். 11.30 மணிக்கு டிஎன்ஏ சோதனை செய்து விட்டோம். அது பிரபாகரனின் உடல் தான் என்று அறிவித்து விட்டார்கள்.

அறிவித்தது சாதாரணமான ஆள் அல்ல. அப்போது இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தான். அப்போது, மருத்துவர் சந்திரசேகர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், டிஎன்ஏ சோதனை என்பது ஒரு மணி நேரத்தில் செய்யக்கூடியது அல்ல. அதனை செய்வதற்கு நான்கு நாட்கள் ஆகும். அந்த பரிசோதனைக்கு, சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரின் இரத்தம் தேவைப்பட்டிருக்கும் என்று உறுதிபட கூறியுள்ளார். இலங்கை காட்டியது பிரபாகரன் உடல் இல்லை. இலங்கை பொய் சொல்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். இலங்கை இராணுவம், அரசாங்கம் பொய் கூறுகிறார்கள் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை சேர்த்திருக்கின்றார்கள். ஒரு கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டால் இறப்பு சான்றிதழ் கொடுத்து அவரின் பெயரை நீக்கி விடுவார்கள். இலங்கை அரசு பிரபாகரனை கொன்று விட்டோம், அவரது உடலை காட்டி விட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள். ஏன் இந்தியாவிடம் இறப்பு சான்றிதழ் கொடுக்கவில்லை? ஏன் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இருக்கின்றது?

இந்திய அரசாங்கம் அமைத்த விசாரணை குழு இன்னமும் அதனை விசாரித்துக் கொண்டிருக்கின்றது. இதெல்லாம் என்ன நாடகம். அந்தவகையில், இலங்கை அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை. இந்திய அரசும் பிரபாகரன் இறந்ததை நம்பவில்லை என்று தான் தோன்றுகின்றது. அதற்காகத்தான் அவர் இறந்து விட்டது போன்று பொய் கூறுகிறார்கள். அப்படித்தானே இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Tags:    

Similar News