மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்!

மயிலம் முருகர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-23 08:31 GMT

மயிலம் முருகன் கோவில் பங்குனி தேரோட்டம் 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. இதனையொட்டி கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

8ம் நாள் திருவிழாவான நேற்று இரவு திருக்கல்யாணமும், வெள்ளி குதிரை வாகன உற்சவமும் நடைபெற்றது. பங்குனி உத்தர விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேரில் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலயசுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைத்தார்.

தேரோட்டத்தில் தமிழ் நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்

முதலில் விநாயகர் தேரை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பெரிய தேரிலும் சென்றது. அப்போது ‘மயிலம் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு இருந்தது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்தி மலையேறினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். 

இன்று இரவு முத்து விமான உற்சவமும், வரும் 24 ம் தேதி காலை பங்குனி உத்திரம், தீர்த்தவாரி உற்சவமும், இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 25ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும், 26 ம் தேதி இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்திருந்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News