வேலூர்: ரயிலில் மது கடத்திய மாணவர் உட்பட 7 பேர் கைது!

வேலூர் மாவட்டத்தில் ரயில்களில் கடத்திய கர்நாடக மாநில சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-05 14:34 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மது வகைகள்.


தமிழகத்தில் கொரோனா 2 வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 7 ம் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளது . இந்த ஊரடங்கில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன . இதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர் .இதனால் அண்டை மாநில சரக்குகளும், கள்ளச்சாராய நடமாட்டமும் அதிகரித்துள்ளது .

குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் சாஷே பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மது வகைகளும், மது பாட்டில்களும் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன .

இதனால் ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி தொடங்கி இன்று 5 ம் தேதி வரை கடந்த 10 நாட்களில் மொத்தம் 209.33 லிட்டர் பிராந்தி , விஸ்கி, ரம், ஓட்கா மதுபாட்டில்கள், சாஷே பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன .

இது தொடர்பாக வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் ( 30 ), பெங்களூருவை சேர்ந்த பிரேம்குமார் (25), ஆற்காடு கலவைரோட்டை சேர்ந்த ஜாகீர்உசேன் ( 27 ) , வரகூர் பட்டினத்தை சேர்ந்த மோகன் ( 22 ) , போளூர் சனிக்கவாடியை சேர்ந்தயுவராஜ் ( 25 ) , சோளிங்கர் அடுத்த சூரையை சேர்ந்த பாபு ( 40 ) , பெங்களூரு சிவாஜி நகரை சேர்ந்த சரத்குமார் ( 27 ) ஆகிய 7 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர் . மேலும் போலீசாரை பார்த்ததும் தலைமறைவான 2பேரை தேடிவருகின்றனர் .

இதையடுத்து பிடிபட்ட 7 பேரையும், கைப்பற்றப்பட்டமதுபாட்டில்கள், சாஷே பாக்கெட்டுகளையும் வேலூர் கலால் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கலால் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags:    

Similar News