வேலூர் மாநகராட்சி பகுதியில் குவித்த 20 டன் பட்டாசு குப்பைகள்

குப்பைகளை அகற்றும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Update: 2023-11-13 12:55 GMT

குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் 

வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 190 முதல் 200 டன் குப்பை சேரும். இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு நகர் முழுவதும் குவிந்துள்ளன.

நேற்று தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாக மாக கொண்டாடினர். இதனால் பல இடங்களில் பட்டாசு கழிவுகள் குவிந்தன. இது தவிர சாலையோர கடைகளில் கடந்த சில நாட்களாக புத்தாடை விற்பனை மும்முரமாக நடந்தது. அதில் தேவையில்லாத பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும் சாலையோரம் குவிந்தன.

இப்படி பட்டாசு வெடித்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 20 டன் அளவிற்கு குப்பை சேர்ந்து உள்ளது . இன்று காலையில் வழக்கமாக சேறும் குப்பைகள் உள்பட அனைத்து குப்பைகள் சேர்ந்து சுமார் 220 டன் குப்பைகள் குவிந்தன.

இதனை தொடர்ந்து இன்று காலையில் வேலூர் மாநகர் முழுவதும் குவிந்திருந்த குப்பைகளை 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மை செய்தனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன. பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் சேர்ந்த தீபாவளி பட்டாசு குப்பைகளை அவர்களே எரித்தனர்.

Tags:    

Similar News