வேலூரில் 75 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் 75 வாகனங்களில் இருந்து தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Update: 2022-05-11 15:56 GMT

வாகனங்களில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையிலும் காற்று ஒலிப்பான்கள் பொருத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடையை மீறி பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்களிலும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தடையை மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்களை அகற்றிட அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், வேலூர் மாவட்டம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாநகரம், குடியாத்தம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி உள்பட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆய்வில், இதுவரை 75 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை அதிகளவில் பொருத்தியுள்ளனர். இதையடுத்து, தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் காற்று ஒலிப்பான்களை அகற்றுமாறு கூறியதற்கு இரண்டு நாட்களில் காற்று ஒலிப்பான்களை அகற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இரு சக்கர வாகனங்களில் உல்ஃப் எனப் படும் காற்று ஒலிப்பான்களை இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது

Tags:    

Similar News