மழைநீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு: மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார்

ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது

Update: 2023-10-30 15:33 GMT

வேலூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

அப்போது காட்பாடி அருகே பெரியபட்டரையைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது;-

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை, போர்வெல் பழுதடைந்து ஒரு மாதம் ஆகிறது. போதிய கால்வாய் வசதி இல்லாததால் பல மாதங்களாக மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதி பொதுமக்களுக்காக 1993-ம் ஆண்டு தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பொது காரியங்கள் செய்வதற்கான மண்டபம் மற்றும் போக்குவரத்து வசதிக்காக சாலைகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த இடத்தில் ஒரு சிலர் தவறான அணுகுமுறையில் பட்டா பெறப்பட்டு அங்கே குடியேறி வீடு கட்டி உள்ளனர்,

எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடத்தையும் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையும் மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பொது உபயோக இடத்தில் எங்கள் பகுதி மக்களுக்கு காரியமண்டபம் மற்றும் சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என கூறினர்

Tags:    

Similar News