ஒரேநாளில் ரூ19 கோடியே 71 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஒரேநாளில் ரூ19 கோடியே 71 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை

Update: 2021-10-04 12:15 GMT

கோப்புப்படம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளைமறுநாள் (புதன்கிழமை) மற்றும் வருகிற 9-ந் தேதி 2 கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை 6 நாட்கள் 3 மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான இடங்களில் கடை திறக்கும் முன்பாக மதுபிரியர்கள் மதுபானங்கள் வாங்குவதற்காக காத்திருந்தனர். பலர் 6 நாட்களுக்கும் தேவையான மது, பீர் வகைகளை வாங்கி சென்றனர்.

மாலை முதல் இரவு விற்பனை நேரம் முடியும் வரை ஏராளமான மதுபிரியர்கள் கடைகளின் முன்பு குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கி உற்சாகத்துடன் சென்றனர். அதனால் வழக்கத்தை விட கூடுதலாக மது, பீர் வகைகள் விற்பனையாகின.

பலர் பெட்டி, பெட்டியாக மதுபானங்கள் வாங்கி செல்வதை காண முடிந்தது.ரூ.19½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை வேலூர் டாஸ்மாக் கோட்டம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 115 டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.9½ கோடிக்கு மதுபானங்கள் கூடுதலாக விற்பனையானது.

ஒரேநாளில் ரூ.12½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். அதேபோன்று அரக்கோணம் டாஸ்மாக் கோட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடியே 21 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. இங்கு மற்ற நாட்களில் ரூ.2 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று  ஒரேநாளில் மொத்தம் ரூ.19 கோடியே 71 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News