வேலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. மேலும் இரவு முதல் விடியும் வரை தொடர்ந்து மழை பெய்தது.

Update: 2023-12-03 11:24 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழையும் பெய்தது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது.

நேற்று மாலை தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதனால் வேலூர் நகரில் முக்கிய சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறுபோல் ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. மேலும் இரவு முதல் விடியும் வரை தொடர்ந்து மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக புதிய பேருந்து நிலையம், கிரீன் சர்கிள், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தின் அடியில் வாகன ஓட்டிகள் மழைக்காக ஒதுங்கி நின்றனர். அந்த இடத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் கிரீன் சர்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோன்று சேண்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில்தெரு, கன்சால்பேட்டை, இந்திரா நகர், தோட்டப்பாளையம் உள்பட பல்வேறு பகுதி களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

அதேபோல் திருவண்ணாமலை, செங்கம், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூர், கண்ணமங்கலம், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், திருவலம், பொன்னை, பேரணா ம்பட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், பொன்னை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பாலாற்றை ஒட்டி உள்ள செதுவாலை, கந்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளும் நிரம்பியுள்ளது.

மேலும் பல ஏரிக்கு நீர்வ ரத்தும் அதிகரித்துள்ளது. அறுவடைக்கு ஏற்ற தை மாத பட்டத்தில் , நெற்பயிர் நடவு செய்ய ஏர் உழுது நிலத்தை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News