வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Update: 2021-11-30 12:28 GMT

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நீர் தேங்கிக்கிடக்கும் காட்சி

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் அகழி தண்ணீர் கடந்த 12-ந்தேதி புகுந்தது. கோவில் வளாகத்தில் உள்ளே இருக்கக்கூடிய குளம் பகுதி முழுவதுமாக தண்ணீர் தேங்கியது. பக்தர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அபிஷேக நீர் செல்லும் வழியாக கோவிலுக்குள் தண்ணீர் வந்ததால் அதை மூடி விட்டு, உள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.

நேற்று அம்மன் சன்னதி கருவறைக்குள் தண்ணீர் புகுந்ததால், அர்ச்சகர்கள் தண்ணீரில் நின்று கொண்டு அம்மனுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்ததால் இன்று காலை மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது. கோவிலுக்குள் சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீர் வெளியேறும் குழாய் ஊற்று போன்றவற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

இதனால் இன்று காலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் பாசி படர்ந்து வழுக்கி விழ கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீரும் அசுத்தம் அடைந்து வருகிறது. ராஜகோபுரத்திற்கு வெளியே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ள உற்சவர் மற்றும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

தண்ணீர் வடியும் வரை கோவில் பூட்டப்பட்டிருக்கும். கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News