நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

Update: 2022-07-12 04:18 GMT

கேரள மாநிலத்தின் சில பகுதிகள் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் காவிரி ஆற்றிற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. காவி ரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காவல்துறையினர் தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News