மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயலில் கிரிக்கெட் விளையாடிய விவசாயிகள்

வந்தவாசியில் பயிர் பாதிப்புகளை மறுகணக்கெடுப்பு எடுக்கக்கோரி நெல் வயலில் கிரிக்கெட் விளையாடி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-06 06:38 GMT

வந்தவாசியில் சாகுபடி பாதிப்புகளை மறுகணக்கெடுப்பு எடுக்கக்கோரி நெல் வயலில் கிரிக்கெட் விளையாடி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாநில செய்தி தொடர்பாளர் வாழ்குடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், 

வந்தவாசி பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வயல்கள் நீரில் மூழ்கின. இதனால் இந்த தாலுகாவில் உள்ள 40 ஆயிரம் ஏக்கரில் 30 ஆயிரம் ஏக்கர் வயல்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன் சம்பா நெற்பயிர்கள் 70 ஆயிரம் ஏக்கரும் மணிலா, உளுந்து 60 ஆயிரம் ஏக்கரும் இழப்புக்கு உள்ளாகி உள்ளது.

ஆனால் வேளாண் அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி 2 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாதிப்பு என கூறப்படுகிறது.  விவசாயிகள் நிவாரணம் கேட்டு மனு கொடுத்தால் அதனை கிரிக்கெட் விளையாட்டில் பந்தை அடித்து ஆடுவது போல விவசாயிகளின் மனுக்கள் திரும்பி வருகிறது. எனவே வேளாண் அதிகாரிகளை கண்டித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார். 

வேளாண் உதவி அலுவலர்கள் மனுக்களை நிராகரிப்பதை கண்டித்து விவசாயிகள் ஒரு அணியாகவும், அதிகாரிகள் ஒரு அணியாகவும் நிற்பதுபோல் பாதிக்கப்பட்டு முளைத்துக் கிடக்கும் விவசாய நிலத்தில் விவசாயிகள் கிரிக்கெட் விளையாடி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இதில் வென்ற வேளாண் அதிகாரிகள் அணிக்கு பரிசுக்கோப்பையை வழங்கி, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.

விளையாட்டாக இருந்தாலும், அதிலும் அரசு அதிகாரிகளே வென்றனர். 

Tags:    

Similar News