திருவண்ணாமலையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் விபத்தில் உயிரிழப்பு.. உறவினர்கள் மறியல்…

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2022-12-28 08:16 GMT

திருவண்ணாமலை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேந்திரனின் உறவினர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47). இவர், மேக்களூர் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்) மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து டாஸ்மாக் கடைக்குச் சென்ற ராஜேந்திரன், வசூலான பணத்தை வங்கியில் செலுத்தி விட்டு மாலை சோமாஸ்பாடி வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

சோமாஸ்பாடி அருகில் செல்லும் அவரது மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ராஜேந்திரனுக்கும், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை, அந்த வழியாக காரில் வந்த காரில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். இதற்கிடையில் காரில் வந்தவர்களுக்கும், ராஜேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாராம்.

காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த ராஜேந்திரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோதம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டு வந்து கொன்றுவிட்டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.

அவருடைய உடலில் எந்த காயங்களும் இல்லாத நிலையில் அவர் உண்மையிலேயே விபத்தில் இறந்தாரா? அல்லது முன் விரோதம் காரணமாக வேறு ஏதாவது நடந்திருக்குமா? என்று பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி ராஜேந்திரனின் உறவினர்கள் இன்று காலை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், ராஜேந்திரனின் உடலுடன் காரை மருத்துவமனைக்கு முன்பு எடுத்து வந்து புறவழிச்சாலையில் நடுவில் நிறுத்தியதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ராஜேந்திரன் சாவின் சந்தேகம் உள்ளது என்று உறவினர்கள் கூறினர். எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். உறவினர்களிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News