திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, நடத்தப்பட்டது

Update: 2024-03-29 11:25 GMT

வந்தவாசியில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி.

புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், புனித வியாழனை முன்னிட்டு பாதங்களைக் கழுவி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தொடங்கியது.

40 நாட்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில், இயேசுவின் கடைசி இரவு உணவு, சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தப் புனித வாரத்தின் முதல்நாளான கடந்த 24ம் தேதி குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று புனித வியாழனை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியுடன், இயேசு கிறிஸ்து தன்னையே தாழ்த்திக் கொண்டு, சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி பங்கு குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது. மேலும் இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் உணவருந்திய கடைசி இரவு உணவு நினைவுபடுத்தப்பட்டது.

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள உலகமாதா தேவாலயத்தில் காலை சிலுவை பாதை வழிபாடு நடந்தது. பங்கு தந்தை ஞானஜோதி தலைமையில் கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி சென்று உலக மாதா ஆலயத்தில் 14 இடங்களில் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்..

செங்கம் பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு பிராத்தனை மற்றும் கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் ஏசுநாதர் போல் வேடம் அணிந்த ஒருவரை சிலுவை சுமக்க வைத்து அடித்து இழுத்து வருவது போலவும் தொடர்ந்து அவர் சிலுவை சுமப்பது போன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து அவரை சிலுவையில் அறைந்த பிறகு கல்லறையில் அடக்கம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆரணி:

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பங்குத்தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் நெடுங்குணம் மாதா மலைக்கு சிலுவை ஏந்தி பயணம் நடைபெற்றது, இதில் கிறிஸ்தவர்கள் சிலுவையைத் தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று 14 இடங்களில் சிலுவையை வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

கீழ்பெண்ணாத்தூர்:

வேட்டவலம் மலையில் உள்ள புனித தேவாலயத்திற்கு சிலுவைப்பாதை எடுத்துச் செல்லப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News