எஸ்கேபி கல்வி குழுமம் சார்பாக மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள்..!

எஸ்கேபி கல்வி குழுமம் சார்பாக மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள், நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2024-05-27 12:25 GMT

பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய பேச்சாளர் ராஜ்மோகன்

திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம் சார்பாக மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் வேட்டவலம் தனியார் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்கேபி கல்வி குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். எஸ்கேபி கல்வி குழுமத்தின் இணைச் செயலாளர் அரங்கசாமி முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் தினேஷ் பிரபு அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேச்சாளா் ராஜ்மோகன் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்துப் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு முக்கியம் என்று நான் நினைக்கவில்லை, எனக்கு என்ன வருமோ அதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் முன்னேற்றம் அடைந்தேன். அதேபோல குழந்தைகளுக்கு முதல் கடவுள் பெற்றோர்கள்தான்.

மாணவர்கள் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கும் பக்குவம் வந்துவிடும். இங்கு ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது. ஓவிய போட்டியின் நன்மைகள் படைப்பாற்றல் உணர்ச்சி நுண்ணறிவு, நினைவாற்றல் சுயமரியாதை மன அழுத்தத்தை குறைக்கும், மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.

நடனம் தசை வலிமையை அதிகரிக்கிறது. சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. சிறந்த ஒருங்கிணைப்பு, சுறுசுறுப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மையை கொடுக்கிறது.

பாடல் பாடுவது மன அழுத்தத்தை குறைக்கிறது. மனச்சோர்வின் அறிகுறிகளை நீக்குகிறது. நினைவுகளை மேம்படுத்துகிறது. மனம் விழிப்புணர்வு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

திருக்குறள் பாராயணம் நமது ஒட்டுமொத்த மகிழ்ச்சியை அதிகரித்து வாழ்வின் நோக்கத்தை நமக்கு வழங்குகிறது. திருக்குறள் நன்றி உணர்வு, நட்பு, அறிவு, அறம் போன்ற நற்பண்புகளை மற்றும் செயல்களை அடிப்படையாகக் கொண்டது என கூறினார்.

நிகழ்ச்சியில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி முதல்வா் பாஸ்கரன், எஸ்.கே.பி. கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வெற்றிவேல், எஸ்.கே.பி. வனிதா பன்னாட்டுப் பள்ளி முதல்வா் பிரியா, எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் மாலதி, எஸ்.கே.பி. கல்விக் குழும செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சையத் ஜஹிருத்தீன், பேராசிரியா் ராஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News