திருவண்ணாமலை அருகே விவசாயியை அடித்துக்கொலை செய்த மகன் கைது

திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-01 06:07 GMT

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலத்தை அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52), விவசாயி. இவரது மனைவி தேவி (47). இவர்களது மகன் முத்துகுமார் (29). இவரது மனைவி வேண்டா. இவர் கலசபாக்கம் தாலுகா கிடாம்பாளையம் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

முருகேசனும், அவரது மகன் முத்துகுமாரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் முத்துகுமாரின் குழந்தையை பார்த்து கொள்வதற்காக தேவி, முத்துகுமாரின் வீட்டிற்கு வந்து செல்வார். இதனால் முருகேசனை அவரது மனைவியால் சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன் அவ்வப்போது மனைவி தேவி மற்றும் மருமகளிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் முத்துகுமார் வீட்டிற்கு சென்று முருேகசன் தகராறு செய்து உள்ளார். அப்போது முருகேசனுக்கும், முத்துகுமாருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் அங்கிருந்த இரும்பு கம்பியால் முருகேசனின் தலை மற்றும் கன்னத்தில் அடித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News