தண்டோரா போட்ட தொழிலாளர்களை தாக்கிய பஞ்., தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு

தண்டோரா போட்ட தொழிலாளர்களை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-05-13 07:41 GMT

பைல்படம்.

திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). அதே பகுதியை சேர்ந்த இவரது சகோதரர் வேலு. கடந்த 10-ந்தேதி முருகன் மற்றும் வேலுவிடம் மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் அரசு சார்பில் வழங்கப்படும் இலவச ஆடு, மாடுகள் பெறுவதற்கு தகுதியானவர்கள் துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தண்டோரா மூலம் கிராமத்தில் தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.

அதன்படி, அவர்கள் இருவரும் கிராமத்தில் தண்டோரா போட்டு உள்ளனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் எங்களிடம் தெரிவிக்காமல் எப்படி தண்டோரா போடலாம் என்று கேட்டு ஆபாசமாக பேசி முருகன், வேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகன் மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாணிக்கவேல் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News