மின்சார சட்ட சீர்திருத்தத்தை கைவிடக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்ததை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-08-10 08:02 GMT

மின்வாரிய ஊழியர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்ததை கண்டித்து மின்வாரிய ஊரியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மின்வாரிய தொழிலாளர் சம்மேள நிர்வாகி சம்பத், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பாலாஜி, குரு, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி சரவணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி துரை, ஐ.டி.ஐ. சங்க நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக அனைத்து அதிகாரிகளும், அலுவலர்களும், ஊழியர்களும் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் ஊழியர்கள், பணியாளர்கள் அனைவரும் அலுவலக நுழைவு வாயில் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு.கோட்ட தலைவர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின்சார திருத்த மசோதாவை கண்டித்து கோஷமிட்டனர். முடிவில் துணை செயலாளர் பாவேந்தன் நன்றி கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சில பகுதிகளில் இன்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாளையொட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த நுகர்வோர்கள் பலர் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உங்கள் போராட்டத்தினால் எங்களுக்கு அபராதம் வசூலிக்கும் நிலை ஏற்படுமே என அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினர் . மின் கட்டணம் வசூல் மையம் உடனடியாக திறக்கப்பட்டது. நுகர்வோர்கள் நிம்மதி அடைந்தனர்

Tags:    

Similar News