புதிய நியாய விலை கடை திறந்து வைத்த துணை சபாநாயகர்

புதிய நியாய விலை கடைகளை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

Update: 2024-09-07 02:49 GMT

ரேஷன் கடை திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்களை வழங்கிய துணை சபாநாயகர்

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள கம ல புத்தூர் ஊராட்சியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார் .

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள கமலபுத்தூர் ஊராட்சியில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய செயலாளர் ராமஜெயம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் பாலு, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைத்து பேசியதாவது,

கமலபுத்தூர் மக்கள் நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது இப்பகுதி மக்கள் என்னிடம் நாங்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சென்று தான் ரேஷன் பொருட்கள் வாங்கும் விலை இருந்து வருகிறது, அதுவும் சில நேரங்களில் முதியோர்கள் மற்றும் உடல் நிலை சரியில்லாதவர்கள் தொலைதூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்க முடிவதில்லை. அதனால் எங்கள் பகுதியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தனர். அப்பொழுது நான் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் என்று கூறி அதன் பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும், கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும் நான் கோரிக்கை வைத்தேன்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாணையை வெளியிட்டு புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொள்ளலாம் என்று கூறினர். அதன் பின்னர் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் பகுதியில் புதிய ரேஷன் கடை பகுதிநேர ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டது. மக்கள் கூறும் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து கொடுக்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கூறினார்.

நிகழ்ச்சியில் இணை பதிவாளர் ஜெயம், ஒன்றிய துணை செயலாளர் குபேரன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வினோத்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கமல், பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருள், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ,ஒன்றிய குழு தலைவர்கள், நியாய விலை கடை விற்பனை பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News