கண்காணிப்பு கேமரா வைப்பதில் ஏற்பட்ட மோதல்: மண்பாண்ட தொழிலாளி பரிதாப உயிரிழப்பு

கீழ்பென்னாத்தூர் அருகே மண்வெட்டியால் வெட்டியதில் மண்பாண்ட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-03-26 02:37 GMT

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(51), மண்பாண்ட தொழிலாளி. இவருக்கும் எதிர் வீட்டில் வசித்து வரும் சாந்தி(45) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வேலுச்சாமி தனது வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டார். அப்போது, 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்த சாந்தி, 'என் வீட்டை கண்காணிக்க கேமரா பொருத்துகிறாயா' எனக்கேட்டு வேலுச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த வேலுச்சாமி மண்வெட்டியால் சாந்தியை தாக்கியுள்ளார். இதைக் கண்ட சாந்தியின் மகன்களான வேடி மற்றும் சந்தோஷ் ஆகிய இரண்டு பேரும் வேலுச்சாமியிடம் இருந்த மண்வெட்டியை பறித்து அவரையும் அவரது தாயார் நாவம்மா மற்றும் மனைவி சுசிலா ஆகிய மூன்று பேரையும் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் வேடி, சந்தோஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் வேலுச்சாமியின் தாய் நாவம்மாள், மனைவி சுசீலா ஆகியோர் படுகாயமடைந்தனர். அதேபோல் வேலுச்சாமி மண்வெட்டியால் தாக்கியதில் சாந்தியும் படுகாயமடைந்தார். இதையடுத்து அப்பகுதியில் கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதோடு நாவம்மாள், சுசீலா, சாந்தி ஆகிய மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் வேலுச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தப்பி ஓடிய சாந்தியின் மகன்கள் வேடி, சந்தோஷ் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News