வெறையூர் அருகே பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அருகே பஸ் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-04-08 00:39 GMT

பைல் படம்.

திருச்சி பகுதியில் இருந்து வேலூரை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை வேலூர் மாவட்டம் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன் (வயது 59) ஓட்டி வந்தார். அந்தப் பஸ்சில் கண்டக்டராக வேலூர் மாவட்டம் பெரியஅல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (50) இருந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.

அந்த வழியாக எதிரே திருவண்ணாமலை பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருக்கோவிலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. வெறையூர் அருகே கொளக்குடி அம்மன் நகர் இடத்தில் வந்தபோது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. 

அதில்,  பஸ் டிரைவர் மோகன், கண்டக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் பயணிகள் வேலூரைச் சேர்ந்த ரோசம்மாள் (73) மற்றும் லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் (45) என 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வெறையூர் போலீசார் விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News