திருவண்ணாமலை: சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 பேர் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 பேர் தீக்குளிக்க முயன்றனர்.

Update: 2022-03-20 06:15 GMT

சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ராயம்பேட்டை ஊராட்சி ஆண்டாலூர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து கிராமசபை கூட்டத்தில் மனு கொடுத்ததன் பேரில், சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். அந்த இடத்தில் சிலர் நெல் பயிரிட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்களுக்கு புகார் மனுக்களை அந்தப்பகுதி மக்கள் கொடுத்தனர்.

அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வந்தபோது சிலர் அதிகாரிகளை பணிகளை செய்ய விடாமல் தடுத்து அனுப்பி விட்டனர். இதையடுத்து விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். என திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே ஆண்டாலூர் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதன்பேரில்   தாசில்தார் சக்கரை, ஒன்றிய ஆணையாளர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன், பிரவீன்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சாந்திபஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், முனீஸ்வரன் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சாலை அமைக்கும் பணி நடந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த சந்திரன், நாராயணன், முருகன், கிருஷ்ணன், சுரேஷ், சபினா, ரேவதி ஆகிய 7 பேர் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டு திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

போலீசார் அவர்களை தடுத்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News