13 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே மர்ம விலங்கு கடித்ததில் பட்டியில் அடைத்திருந்த 13 ஆடுகள் உயிரிழந்தது.

Update: 2022-01-24 13:34 GMT

மர்ம விலங்கு கடித்ததில் பலியான ஆடுகள்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாயநிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.

நேற்று  வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு மாலையில் பட்டியில் அடைத்து சென்றார்.  காலை முத்துராமன் ஆட்டுப் பட்டிக்கு சென்றபோது அங்கு கட்டப்பட்டிருந்த 13 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.  அவைகளின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தன. எனவே ஓநாய் போன்ற வனவிலங்குகள் ஆடுகளை கடித்து கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதுபற்றி முத்துராமன் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்ததன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பலியான ஆடுகளை ஆவூர் கால்நடை மருத்துவர் கவிதா பரிசோதனை செய்தார். இதைத்தொடர்ந்து பலியான ஆடுகள் புதைக்கப்பட்டன.

ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது? என்பது மர்மமாக உள்ளதால் சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே ஆடுகளை கொல்லும் விலங்குகளை கண்டறிந்து அவைகள் மீண்டும் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும் என்றும்  விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News