கலசப்பாக்கத்தில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் சாலை மறியல்

யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-16 07:43 GMT

யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பையும் துணை தொழிலாக கொண்டுள்ளனர்.

கலசபாக்கம், புதுப்பாளையம், துரிஞ்சாபுரம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக அதிக அளவு மழை பெய்து ஏரி, குளம், குட்டை மற்றும் அணைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் முழுமையாக மூன்று போகமும் பயிர் செய்து வருகின்றனர். தற்போது விவசாயிகள் நாற்று நடவில் ஈடுபட்டு பயிர் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஆனால் கலசபாக்கம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் சென்று யூரியா கேட்கும்போது அதிகாரிகள் இருப்பு இல்லை என கூறுகின்றனர்.

தனியார் உரக் கடையில் ஏதேனும் மருந்து வாங்கினால் மட்டுமே யூரியா கிடைக்கும் அப்படி இல்லை என்றால் 280 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட யூரியா மூட்டை 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை பில் வழங்காமல் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கடைக்காரர்கள் கூறி வருவதால் விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகே பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென அவர்கள் ரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் . கலசபாக்கம் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பிற மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் நிலையில் இந்தமாவட்டத்தில் மட்டும் ஏன் இன்னும் யூரியா தட்டுப்பாடு என்று விவசாயிகள் வேதனையுடன் கேள்வி எழுப்பி சென்றனர்.

Tags:    

Similar News