3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டது அம்பலம்

3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. சரணடைந்த நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

Update: 2021-12-02 07:01 GMT

தோண்டி எடுக்கப்பட்ட திருப்பதியின் உடல் 

ஜமுனாமரத்தூர் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக சரணடைந்த நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா வீரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 41). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பலாமரத்தூர் கிராமம் தோப்பூரில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்று அன்று மாலை 6 மணியளவில் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். ஆனால் அவர் வீடுக்கு வந்து சேராததால், பல இடத்தில் தேடினர். அவ்வாறு தேடியும்  கிடைக்காததால் இது குறித்து திருப்பதியின் மகன் வீரமணி ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காணாமல் போன திருப்பதியின் மோட்டார் சைக்கிள் சமீபத்தில் செங்கம் துக்காபேட்டையில் உள்ள வாகனநிறுத்தத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் நேற்று  மாலையில் பலாக்கனூர் கிராமத்தை சேர்ந்த மணி என்ற ராமசாமி (32) என்பவர் புலியூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்து காணாமல் போனதாக கூறப்படும் திருப்பதியை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் அவரை ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மணியும், காணாமல் போனதாக கூறப்படும் திருப்பதியும் நண்பர்கள்.  இருவரும் குடிப்பழக்கம் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் அவ்வபோது ஒன்றாக இணைந்து மது அருந்தி வந்து உள்ளனர்.

இதனிடையே,  மணியின் மனைவியிடம் திருப்பதி கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்ததால்,  அவர்களை மணி எச்சரித்து உள்ளார். இருப்பினும் கள்ளதொடர்பில் இருந்து வந்ததால், ஆத்திரம் அடைந்த மணி, சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த திருப்பதியை கத்தியால் வெட்டி கொலைசெய்து உடலை வீட்டின் பின்புறம் புதைத்து உள்ளார்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்து பயந்து போய் சரண்டைந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் நேற்று திருப்பதியின் உடல் போலீஸ், வருவாய்த் துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேதபரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

Tags:    

Similar News