துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பணியிட மாற்றம்

வீரலூர் கலவர சம்பவம் தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-01-29 01:42 GMT

கலசபாக்கம் அருகே வீரளுர் கிராமத்தில் கடந்த 16-ந் தேதி சுடுகாட்டிற்கு செல்லும் பொதுப்பாதை அருந்ததியர் சமுதாயத்தினர் பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

பின்னர் அது மோதலாக மாறி கலவரத்தில் முடிந்தது. அப்போது அருந்ததியர் சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மற்றொரு தரப்பினர் வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நேரில் ஆய்வு நடத்தியது. அதனைத்தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் வீரளுர் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினார். அப்போது அவர் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் கலவரத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை காவல் கண்காணிப்பாளராக  பணிபுரிந்து வந்த குணசேகரன் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

மேலும் கலசபாக்கம் வட்டாட்சியராகபணிபுரிந்த ஜெகதீசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருவண்ணாமலை தனி வட்டாட்சியராக  (குடிமைப்பொருள்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை தனி வட்டாட்சியராக (குடிமைப்பொருள்) பணிபுரிந்து வந்த உதயகுமார் கலசபாக்கம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கிராமத்தில் சுமுகமான சூழ்நிலை மீண்டும் ஏற்படுவதற்கான தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. வருவாய்த்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து வீரளுரில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News