செய்யாறு பஸ் நிலையத்தில் பரபரப்பு: இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டதால் செய்யாறு பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-24 09:49 GMT

சாலை விபத்தில் பெண் பலியானதை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு அரசு போக்கவரத்து கழக நிறுவனம் நஷ்டஈடு வழங்காததால் செய்யாறில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வனஜா, கூலித் தொழிலாளி. இவர் கடந்த 11.4.2008 அன்று வேலைக்குச் சென்றுவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

ஞானமுருகன்பூண்டி கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வனஜா செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், விபத்தில் இறந்த வனஜாவின் கணவர் முருகன் மற்றும் மகன் ராஜசேகர், மகள்கள் விஜயசாந்தி சுமதி ஆகியோர் நஷ்டஈடு வழங்கக்கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி மனுதாரர்களுக்கு நஷ்டஈடாக ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் வழங்க வேண்டும் என்று 25.3.19 அன்று உத்தரவிட்டார்.  ஆனால் அரசு போக்குவரத்து கழகம் அந்த இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. அதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் சார்பு நீதிமன்றத்தில் நஷ்டஈடுத் தொகையை வழங்க நிறைவேற்று மனுவைத் தாக்கல் செய்தனர்.

அதன்பேரில் அசலும் வட்டியும் சேர்த்து ரூ.27 லட்சத்து 34 ஆயிரத்து 335-ஐ மனுதாரர் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சார்பு நீதிபதி குமாரவர்மன் உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்துக் கழகத்தினர் நஷ்டஈடுத் தொகை வழங்காததால் இன்று செய்யாறு பஸ் நிலையத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து சேலம் செல்ல இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த பஸ் நிலையம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News