சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி, மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.

Update: 2022-06-24 01:01 GMT

மருத்துவமனை முன் திரண்ட பெற்றோர்கள், பொதுமக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் உள்ளனர். நேற்று காலை மாணவ - மாணவியருக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அனைவரும் மாத்திரை சாப்பிட்ட நிலையில் மதியம் 1:00 மணியளவில் பள்ளியில் வழங்கப்பட்ட முட்டையுடன் கூடிய மதிய உணவை சாப்பிட்டனர்.

அப்போது திடீரென 47 மாணவ - மாணவியருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகிலுள்ள காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 45 மாணவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

2 மாணவர்கள் மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில் வழக்கமாக கொடுக்கப்படும் மாத்திரை சாப்பிட்டு பின்னர் சத்துணவு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா அல்லது மாணவர்களுக்கு தயாரித்த சத்துணவில் ஏதேனும் குளறுபடி நடைபெற்றதா என ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News