வனச்சாலை அமைப்பதற்கான இடம்; அதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் தர்மபுரி மாவட்டம் இணைக்கும் வனச்சாலை அமைப்பதற்கான இடத்தினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-10-07 02:08 GMT

வனச்சாலை அமைப்பதற்கான இடத்தினை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்

திருவண்ணாமலைமாவட்டம் மற்றும் தர்மபுரி மாவட்டம் இணைக்கும் இரண்டு கிலோமீட்டர் வனச்சாலை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட கவுன்சிலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை ஊராட்சி, கொட்டாவூர் பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுக்கா, வேடக்கட்டமடுவு ஊராட்சி, கருங்காலிபாடி கிராமத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அரசு பயணிகள் பேருந்து செல்லும் வழியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் எல்லை முழுவதும் வனப்பகுதியாக உள்ளது. வனப்பகுதியில் சாலை அமைக்க முடியாமல் மழைக்காலங்களில் பேருந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனை போக்கும் விதமாக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரிக்கு வேடகட்டமடுவு மற்றும் கருங்காலிபாடி மக்கள் வன பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பொது மக்களின் கோரிக்கை அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் வனத்துறை மற்றும் ஒன்றிய பொறியாளர் அவர்களுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு பொது மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதி சாலையை ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைத்து வனத்துறைக்கு ஊராட்சி நிர்வாகம் எடுக்கும் இடத்தினை வனத்துறை அதிகாரிகள் கேட்கும் அளவு இடத்தினை ஊராட்சி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் வனத்துறை அலுவலர் கோவிந்தன் மற்றும் ஒன்றிய பொறியாளர் வினோத்குமார் ஆகியோர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டமும் தர்மபுரி மாவட்டமும் இணைக்க கூடிய இடம் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு வனப்பகுதியாக உள்ளது இந்த வனப் பகுதியை நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

அப்பொழுது இரண்டு கிலோமீட்டர் வரை சாலை அமைக்காமல் உள்ள வனப்பகுதிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்பொழுது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதி சாலை அமைப்பதற்கான இடம் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு வனத்துறை வளாகம் இடத்திற்கு ஈடாக ஊராட்சியில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தினை ஊராட்சி நிர்வாகம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

பொதுமக்கள் நீண்ட கால கோரிக்கையாக இருந்த இரண்டு கிலோமீட்டர் வன சாலை சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை வைத்து கோரிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த ஆய்வின்போது போக்குவரத்து துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Similar News