மூன்று குழந்தைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த தாய்

திருவண்ணாமலை அருகே தற்கொலைக்கு முயன்ற தாய் 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-06 02:25 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா (27). இவர்களது மகன்கள் நிலவரசு (5), குறளரசு (4). மகள் யாஷினி (7 மாதம்). இதில் நிலவரசு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மதியம் அமுதா தனது மகன்களான நிலவரசு, குறளரசு மற்றும் 7 மாத கைக்குழந்தையான யாஷினி ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் கரைக்கு வந்தார். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று கொண்டிருந்தது. அங்கு அமுதா திடீரென தனது 3 குழந்தைகளையும் துணியால் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆற்றுக்குள் குதித்தார்.

பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் 3 குழந்தைகளும், அமுதாவும் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில் 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டனர். அமுதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 3 குழந்தைகளின் உடலையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

தகவல் அறிந்து வந்த வாணாபுரம் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் 3 குழந்தைகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், அமுதாவுக்கும் அவரது கணவர் பரசுராமனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்ததாக தெரியவந்தது. அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேப்பூர்செக்கடி பகுதியில் உள்ள அமுதாவின் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்ற பரசுராமன் அங்கேயே தங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடும் மனஉளைச்சலில் இருந்த அமுதா, பள்ளியில் இருந்த மூத்த மகன் நிலவரசுவை பாதியிலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த மற்ற 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அமுதா சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நினைவு திரும்பிய பின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 3 குழந்தைகள் இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News