திருவண்ணாமலை அருகே பிரசவித்த தாயும், குழந்தையும் இறந்த பரிதாபம்

திருவண்ணாமலை அருகே பிரசவித்த தாயும், குழந்தையும் இறந்ததால் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-03-10 02:42 GMT

சென்னம்மாள்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடியை அடுத்த ஆண்டாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 25). இவரது மனைவி சென்னம்மாள் (23). இவர்களுக்கு 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சென்னம்மாளுக்கு கடந்த 7-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து, சில நிமிடங்களிலேயே குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னம்மாளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நேற்று அதிகாலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தானிப்பாடி அரசு மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு முறையான சிகிச்சை அளிக்காததுதான் தாய்-சேய் இறந்ததற்கு காரணம் என்றும் கூறினர்.

மேலும் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றுவதால் முறையான சிகிச்சை இல்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், முறையான சிகிச்சை அளிக்காத டாக்டரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News