வாணாபுரம் அருேக இருதரப்பினர் இடையே மோதல்: போலீஸ் குவிப்பு

வாணாபுரம் அருேக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2021-11-07 01:52 GMT

வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகில் உள்ள சதாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் அந்த வழியாக பைக்கில் வேகமாக சென்றபோது, மற்றொரு தரப்பினர், ஏன் வேகமாக செல்கிறாய்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி தகாத வார்த்தைகளால் பேசி திட்டி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாணாபுரம் போலீசார், மேற்கொண்டு அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.

நேற்று மாலை மற்றொரு தரப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் வந்து அப்பகுதியில் உள்ள வீடுகள், மரங்களை சேதப்படுத்தி, கற்களை வீசி தாக்கினர். இதனால் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்படவில்லை.

நேற்று மாலை வட்டாட்சியர் பரிமளா தலைமையில் வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் ஆகியோர் இருதரப்பினரை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறப்பட்டது. மேலும் ஒரு தரப்பினர், கஞ்சா விற்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அதை விற்பனை செய்பவரை கைது செய்ய வேண்டும், கஞ்சா விற்பனை செய்வதால் தான் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது, எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஒரு தரப்பினர் கலெக்டரை சந்தித்து தங்களின் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்கச் சென்றதால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News