தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 1,700 கன அடி நீர் வெளியேற்றபாடுவதால், தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Update: 2021-10-25 07:26 GMT

சாத்தனூர் அணை

தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

இந்த ஆண்டு சாத்தனூர் அணையின் மதகுகளுக்கு புதிய இரும்பு ஷட்டர்கள் அமைக்கும் பணி, பூங்காக்களை சீரமைப்பது, புதிய குடியிருப்புகள் கட்டுவது உள்ளிட்ட பணிகள் ரூ.90 கோடியில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவுக்கு நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சாத்தனூர் அணையை சுற்றி பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அணையில் 97.45 அடி உயரத்திற்கு 3 ஆயிரத்து 392 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வருகின்ற உபரி நீரை அப்படியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். சாத்தனூர் அணைக்கு தற்போது அணைக்கு வினாடிக்கு 1,680 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சாத்தனூர் நீர்பிடிப்பு பகுதிகளில் முதலைகள் உள்ளதால், உள்ளன.  ஆற்றுப்படுகைகளில் முதலைகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் சாத்தனூர் அணை நீர் பாசன கால்வாயிலோ ஆற்றுப்படுகையிலோ இறங்கி குளிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் அணையின் பாதுகாப்பு கருதி 24 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News