இயற்கை விவசாயம் செய்ய, பசுந்தால் உர விதைகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை விவசாயம் செய்ய பசுந்தால் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் என, வேளாண்மை துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-19 01:11 GMT

இயற்கை விவசாயம் செய்ய பசுந்தால் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும் என, வேளாண்மை துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். ( மாதிரி படம்)

இயற்கை விவசாயம் செய்திட பசுந்தாள் விதை தக்கை பூண்டு 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் என்று தண்டராம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தண்டராம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராம்பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மண்வளத்தை பாதுகாக்க கூடிய பசுந்தால் உரங்கள் பயன்பாடு பற்றி விவசாயிகள் தெரிந்து கொண்டு விவசாயம் செய்ய வேண்டும்.

தக்கை பூண்டு, சணப்பை, வேலி மசால், குதிரை மசால், பயிறு வகைகள் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் விதைக்க வேண்டும். விதைத்த 45 முதல் 50 வது நாட்களில் பூ பூக்கும் தருவாயில் செடிகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இப்படி மடக்கி உழவு செய்வதால் மண்ணிற்கு அங்கக கரிமசத்து எளிதில் கிடைக்கும். இந்த பசுந்தால் பயிர்களை நிலத்தில் விதைத்து பயன்படுத்துவதால் மண்வளம் அதிகரிக்கும். மண்ணின் கலர் தன்மை முற்றிலும் மாறி மண் பொலபொலப்பு தன்மை ஏற்படும். மண் அமைப்பை மேம்படுத்தும் மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும். மண்ணில் நுண்ணுயிர்கள் வேகமாக பெருகி மண்புழுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கும் பசுந்தாள் பயிர் நன்செய் மற்றும் புன்செய் ஆகிய இருபயிருக்கும் உபயோகிக்கலாம்.

இதுதவிர, உற்பத்தி அதிகரிப்புக்கென அதிகளவிலான ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிா்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளமும், நலமும் குன்றி அதிகளவில் களா், உவா் அமில நிலங்களாக மாறியுள்ளன. இந்நிலை தொடா்ந்தால் மலடான மண்ணைத்தான் நம் எதிா்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் நிலை ஏற்படும். வேதிப் பொருள்களின் எச்சம் இல்லாத வேளாண் விளை பொருள்களே நமக்கு நல்லுணவு, அருமருந்து.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் மண்ணுயிா் காப்போம் திட்டம் 22 இனங்களுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய இனமான பசுந்தாள் உர உபயோகத்தை விவசாயிகளிடையே ஊக்குவித்து, மண் வளம் காக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, விவசாயிகளுக்கு இப்போது தண்டராம்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும், குத்தகைதாரா்களும் பயன்பெறலாம். தேவைப்படும் விவசாயிகள் தங்களது சிட்டா ஆதார் ஆகியவை கொண்டு வந்து தக்க பூண்டு விதையை பெற்று பயன்பெறலாம். என்று தண்டராம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Similar News