வாழவச்சனூர் வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு: வியாபாரிகள் ஏமாற்றம்

ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில் வாழவச்சனூர் வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்

Update: 2022-05-03 01:40 GMT

வாழவச்சனூர் வாரச்சந்தை

வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று வாரச்சந்தை நடக்கும். சந்தைக்கு சுற்று வட்டாரப் பகுதிகளான தானிப்பாடி, திருவண்ணாமலை, செங்கம், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கராபுரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடு, மாடுகளை வாங்கி செல்வது வழக்கம்.

ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ள நிலையில் திங்கட்கிழமையான நேற்று பெரிய அளவில் வாரச்சந்தை நடக்கும் என்றும், அதிகமாக ஆடுகள், மாடுகள் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாழவச்சனூர் வாரச் சந்தைக்கு அதிகளவில் ஆடுகள் வரவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆடுகள் வந்தன.

எனினும், ஏராளமான வியாபாரிகள் வாழவச்சனூர் வாரச்சந்தைக்கு வந்தனர். ஆனால் அதிக எண்ணிக்கையில் ஆடுகள் வராததால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வாங்குவதற்காக வாழவச்சனூர் வாரச்சந்தைக்கு வந்தோம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் வரவில்லை. இதனால் ஆடுகள் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம், என்றனர்.

சுங்க சாவடிகளில் விலை ஏற்றம், டீசல் விலையேற்றம், வண்டி வாடகை மற்றும் அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் என பல காரணங்களால் பல இடங்களில் வியாபாரம் மந்தமாகவே இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News