கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தண்டராம்பட்டு ஊராட்சி பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-10-10 02:14 GMT

திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம்  தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், கீழ்வணக்கம்பாடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்ததாவது:- 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீர்மிகு திட்டமான கலைஞர் கனவு இல்ல திட்டமானது முத்தமிழறிஞர் கலைஞர் கனவு திட்டங்களில் ஒன்றான குடிசைவாசிகள் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கும் விதத்தில் குடிசைகள் இல்லாத வீடுகளை உருவாக்குவது அரசின் நோக்கமாகும். 

குடிசைவாசிகளுக்கு நிரந்தர வீடுகள் கட்டும் பணி 1975 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி முயற்சியாக தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக, 2010ல், "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" தொடங்கப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் என்பது வீடற்ற குடிமக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஒரு சமூக நலத்திட்டமாகும் .

இத்திட்டத்தைசெயல்படுத்த தமிழக அரசு மொத்தம் 3500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தபடும் எனவும், முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் ஒரு வீட்டிற்கு ரூ.3.10 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் ரூ. 148 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4800 வீடுகள் கட்டுவதற்கு கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு 831 வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.  இதில் 152 வீடுகள் கட்டுவதற்கு நிலம் குறித்தல் பணிகள் நடைபெற்றிருக்கிறது என தெரிவித்தார்.

25 வீடுகள் கட்டுவதற்கு பள்ளங்கள் தோண்டும் பணிகளும் பணிகளும், 24 வீடுகள் அடித்தள பணிகளும், மீதமுள்ள பணிகளை விரைந்து. தொடங்கவும், அடித்தள நிலையில் உள்ள பணிகளை அடுத்த நிலைக்கும் , தொடங்கப்படாத நிலையில் உள்ள பணிகளை இரண்டு மூன்று தினங்களுக்குள் தொடங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து ராதாபுரம் ஊராட்சியில் பிரதமர்ஜென்மன் திட்டத்தில் கட்டப்பட்டுவரும் 7 வீடுகள் ,மற்றும் கீழ் வணக்கம்ப்பாடி ஊராட்சியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கிணற்றுக்கு சுவர் கட்டும் பணிகளை ஆய்வு செய்து உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

மேலும்  மேநீர் தேக்கத்தொட்டியை முறையாக சுத்தம்செய்து பொதுமக்களுக்கு குளோ ரினேட்ரம் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊராட்சி செயலருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து தண்டராம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, கொளமஞ்சனூர் ஊராட்சியில், நாளாள்பள்ளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுவரும் SBM(G) திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் மாணவர்களுக்கான கழிவறை, தானிப்பாடி ஊராட்சியில் இரண்டு கோடியே பத்து லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட உள்ள இடம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News