3 அடி உயர பெண்ணுக்கு பிரசவம்; திருவண்ணாமலை அரசு மருத்துவர்கள் சாதனை

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூன்று அடி உயரமுள்ள பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Update: 2024-06-24 02:51 GMT

பிரசவத்துக்கு பிறகு குழந்தை மற்றும் ராஜேஸ்வரியுடன் மருத்துவக் குழுவினர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சையில் பிரசவம் பார்த்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது . அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைமருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலஸ்தாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் டிராக்டர் ஓட்டுநர் சக்திவேல், இவருடைய மனைவி ராஜேஸ்வரி இவர் மூன்றடி உயரம் தான் இருப்பார். இவர் மரபணு கோளாறால் எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக பிறக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

சக்திவேல் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரி பரிசோதனைக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு செங்கம் மேல் பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள். இவர் மூன்று அடி உயரமே இருப்பதால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படக்கூடும் என கருதி  இவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர். அதன் பேரில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 

மேலும் அவருக்கு தொடர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் பத்தாவது மாதத்தில் பிரசவம் என்பது ராஜேஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.

அதன்படி மயக்கிவியல் துறை தலைவர் பாலமுருகன், மருத்துவர்கள் சரவணகுமார், பாலகிருஷ்ணன், ஆனந்த்ராஜ் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் ஜெயந்தி ,அருமை கண்ணு, கலைவாணி, கொண்ட மருத்துவக் குழுவினர் ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.

பின்னர் அறுவை சிகிச்சை தொடர்பான விவரங்களை ராஜேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெளிவாக எடுத்துரைத்து அறுவை சிகிச்சைக்கு சம்மதம் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.  இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ராஜேஸ்வரி மற்றும் ராஜேஸ்வரி குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவமனை சிறப்பு மருத்துவர் ஜெயந்தி கூறும் போது;

மூன்று அடி உயரமுள்ள பெண்ணுக்கு குழந்தை பேரு என்பது மிகவும் கடினமானது தான், சாதாரண உயரம் உள்ள பெண்களைப் போன்று அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்காது. அப்படி இருக்கையில் ராஜேஸ்வரி கருவுற்றது அதிசயமானது. இவருக்கு பிரசவம் பார்ப்பது சவால் நிறைந்ததாக இருந்தது. உயரம் குறைவாக உள்ளதால் வயிறு விரிவடையாது, இடுப்பு எலும்பு ஒத்துழைக்காது ,இதனால் அவருக்கு தொடர்ச்சியான வலி இருந்து கொண்டே இருந்தது.

மேலும் இவருக்கு பத்து மாதம் வரை காத்திருந்து சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு கிடையாது என்பதால் ஒன்பதாவது மாதம் தொடக்கத்திலேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து இந்த அறுவை சிகிச்சை செய்தோம்.  மேலும் குறை  பிரசவத்தில் குழந்தை பிறக்கும் போது நுரையீரல் வளர்ச்சி இருக்காது, மூச்சு திணறல் ஏற்படும் இதனை தடுக்க இரண்டு வாரத்திற்கு முன்பு அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து தொடர் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தோம் . குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம்.

மேலும் உயரம் குறைவானவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது வழக்கமான முறையில் மயக்கம் மருந்து செலுத்துவது கடினம் மாற்று முறையில் தான் மயக்கம் மருந்து செலுத்த முடியும். 

இது எங்களுக்கு ஒரு கடினமான சவாலாக தான் இருந்தது,  தற்போது ராஜேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.  குழந்தையின் எடை 2.200 கிலோ கிராம்.  இப்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மயக்கவியல் துறை தலைவரும் பேராசியருமான பாலமுருகன் கூறும்போது , உயரம் குறைவாக உள்ள பெண்ணுக்கு மயக்க மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது சவாலானது. இது எங்களுக்கு முதல் அனுபவம்  என்றார்.

3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிஹரன், கண்காணிப்பாளர் மாலதி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கதிர் பேராசிரியர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Similar News