ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களில் நடவடிக்கை; கலெக்டர் உறுதி
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்;
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர் முருகேஷ்.
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள தானிப்பாடி, தண்டராம்பட்டு வாணாபுரம் ஆகிய உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைைம தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பிழைப்பாளர்களாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தாசில்தார் அப்துல் ரகூப் வரவேற்றார். இதில் தண்டராம்பட்டு, தானிப்பாடி, வாணாபுரம் ஆகிய உள்வட்டங்களை சேர்ந்த 63 கிராமங்களில் இருந்து 1133 மனுக்கள் பெறப்பட்டது.
அந்த மனுக்கள் மீது விசாரணை செய்து 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
ஜமாபந்தியில் விவசாயிகள் பொதுமக்கள் அளித்த மனுக்கள் 15 நாட்களுக்குள் விசாரணை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும். அனைத்து அலுவலர்களும் உத்தரவு பிறப்பித்து பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்ற வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
தமிழகத்திலேயே முதியோர் உதவித்தொகை பயனாளிகளில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 12 தாலுகாக்களில் மாவட்ட அலுவலர்களை நியமித்து பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை விசாரணை செய்து விரைந்து தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் ஸ்ருதி ராணி, துணை தாசில்தார் விஜயகுமார், வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராம் பிரபு , ஒன்றிய செயலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.